Arul
பதில்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்....!
My Places Click Here
|
அருகருகே இருக்கும் உங்கள் வயலிலும் எங்கள் வயலிலும் ஒரே நாளில் நடவு!
முதலில் உங்கள் வயலில் படையல் படைத்து, முதல் நாற்றை நட்டாய் நீ. அடுத்து எங்கள் வயல்... உன் தந்தை வந்து யாருப்பா முதல் நாத்து நடப்போறது? என்றார். எங்கள் வீட்டில் உன்னை மாதிரி பெண் யாரும் இல்லை என்பதால், வந்திருக்கிற பொம்பளயாளுக யாரையாவது நடச்சொல்ல வேண்டியதுதான் என்றேன்.
அட, என்ன ஆளுப்பா நீ என்றவர், அம்மாடி... வா... வந்து சாமியக் கும்பிட்டு நடவ ஆரம்பிச்சு வைம்மா என்றார். நீ வந்து வயலில் இறங்கி நான்கு நாற்றுகளை நட்டாய். உன் பாதம் பட்டுவிட்ட எங்கள் வயலிலும், உங்கள் வயலைப் போலவே செழித்து வளர்ந்தது நெற்பயிர். வயல் முழுவதற்கும் நானே நீர் பாய்ச்சினேன் என்றாலும் நீ நட்ட அந்த நான்கு நாற்றுகளுக்கு மட்டும் என் ஆசைகளையும் பாய்ச்சி வளர்த்தேன்.
அறுவடையன்று அறுக்க வந்த ஆட்களிடம், அந்த நான்கு கதிர்களையும் விட்டுவிட்டு அறுக்கச் சொன்னேன். ஏன் ராசா... நட்ட புள்ளையை விட்டே அறுக்கப் போறீங்களோ? என்றது ஓரமாக நின்றிருந்த ஒரு பாட்டி. நான் சிரித்து வைத்தேன். எனக்கு எல்லாந் தெரியும்... தா அங்கதான் நிக்குது அந்தப் புள்ள... கூப்பிட்டு அறுக்கச் சொல்றதுதான... என்றது பாட்டி. சும்மா இரு பாட்டி. நான் இதை விதைக்கு விட்டு... அடுத்த வருஷம் தனியா ஒரு பாத்தி கட்டி நடப்போறேன். அப்புறம் அதையும் விதைக்குவிட்டு, அதுக்கடுத்த வருஷம் இந்த வயல்பூரா நடுவேன் என்றேன்.
அடேங்கப்பா... இம்பூட்டு ஆசையா? அப்புறம் ஏன் ராசா சும்மா இருக்க. கட்டிக்கிறியானு பொட்டுனு கேட்டுற வேண்டியதுதான என்று சிரித்தது பாட்டி. அதுக்கு என்னப் புடிக்குமோ புடிக்காதோ யார் கண்டது?? என்றேன். ?அதும் சரிதான்? என்று போய்விட்டது பாட்டி.
மறுநாள் அந்த நான்கு கதிர்களையும் அறுக்கலாம் என்று வயலுக்கு வந்தபோது, அதைக் காணோம். விடிவதற்குள் யார் அறுத்தது என்று பதைபதைப்போடு நான் தேடுகையில்... மா மரத்தில் ஒய்யாரமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த உன் கையில் இருந்தன அந்தக் கதிர்கள்.
ஏய், எதுக்கு அறுத்த என்றேன் கோபமாக. ம்... வயல்பூரா அறுத்துட்டு, எதுக்கு இத மட்டும் அநாதையா விட்டீங்க... நான் நட்ட துன்னா? என்றாய். அப்படில்லாம் இல்ல என்றேன். எப்படில்லாம் இல்ல? என்னமோ என்னை பிடிக்குமோ பிடிக்காதோனு கேட்டீங்களாமே... புடிக்காமத்தான் உங்க வயல்ல இறங்கி நாத்து நட்டமாக்கும் என்றாய். உங்கப்பா சொல்லித்தான் நீ வந்தியோனு நெனைச்சேன் என்றேன்.
எங்கப்பாகிட்ட சொன்னதே நாங்கதான், தெரிஞ்சுக்குங்க என்று கழுத்தை வெட்டியபடியே இறங்கி ஓடினாய்.
கதிரு என்று ஆனந்தமாகக் கத்தினேன் நான். அது எங்கிட்டயே இருக்கட்டும். அடுத்த வருஷம் ரெண்டு பேரும் சேர்ந்து நட்டுக்கலாம். முதல்ல என்னைக் கல்யாணங் கட்டிக்கிற வேலையைப் பாருங்க என்று ஓடி மறைந்தாய்.
திருவிழா அன்று
கோவிலில் எல்லோருக்கும்
கஞ்சி ஊற்றிக்
கொண்டிருந்தாய்.
அடடா...
எல்லா ஊர்களிலும்
அம்மனுக்குக்
கஞ்சி ஊற்றுவார்கள்.
எங்கள் ஊரில்
அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!
உன் உடல் முழுவதும்
சுவிட்சுகளா என்ன?
எங்கு தொட்டாலும்
விளக்கு எரிகிறதே
உன் முகத்தில்.
இந்த மேஜை மீதிருக்கும்
உலக உருண்டையின்
மாதிரி போல
நீ கூட உந்தன் மாதிரிதானோ.
உண்மையில்
இந்த உலகைப் போல
நீயும் மிகப் பெரியவளோ.
ஊருக்குள் இது ரொம்ப நாள் பழக்கம்!
நல்ல காரியங்களுக்காக வீட்டைவிட்டு யார் கிளம்பினாலும், எதிரில் உன்னை வரச் சொல்லி... உன் முகம் பார்த்துவிட்டுக் கிளம்புகிற கிராமம் இது. நீயும் யார் கூப்பிட்டாலும், முகம் நிறைய புன்னகையோடு மகாலட்சுமி மாதிரி எதிரில் வருவாய்.
உன் பாட்டியும் தாத்தாவும் பஞ்சம் பிழைப்பதற்காக இந்தக் கிராமத்துக்கு வந்தபோது, என் தந்தைதான் உங்களைக் கோயில் நிலத்தில் குடிசை போட்டுக்கொள்ள அனுமதித்தார்.
கொஞ்ச நாட்களிலேயே... நீ கோயிலைச் சுற்றி மண்டிக்கிடந்த புதர்களை வெட்டி எறிந்து நந்தவனமாய் மாற்றினாய். கோயிலுக்கு கூட்டம் வர ஆரம்பித்தது. உனக்கு முகராசிக்காரி என்கிற பட்டமும் கிடைத்தது.
கோயிலுக்கு பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி எங்கள் வீடு வருவாய். இன்றும் அப்படித்தான்... அதிகாலையிலேயே குளித்து முடித்த ஈரம் காயாமல் வந்திருந்தாய், உன் பாட்டியோடு.
உங்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு என் தந்தை உள்ளே போயிருந்தபோது... கொய்யா மரத்திலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. ஓடிப்போய் அந்தப் பூவைக் கையில் எடுத்த நீ அச்சச்சோ... விழுந்துட்டியா... அணில் தள்ளி விட்டுச்சா... என்றாய். பின்னர், அந்தப் பூவை அதன் மரத்தடியில் வைத்து கவலைப் படாதே... நீ காயாகி, பழமாகி யாருக்கோ உணவாவதை விட, நீ பூத்த மரத்துக்கே உரமானால், உனக்கு சொர்க்கமே கிடைக்கும் என்றபடியே, அதனை மண்ணிட்டு மூடினாய்.
உள்ளிருந்து என் தந்தை வந்து கொடுத்த பொருட்களை வாங்கிக்கொண்டு உன்னைப் போகச்சொன்ன பாட்டி... தனியாக என் தந்தையிடம்... நாங்க கண்ணை மூடுறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பாத்துடணும். அதுக்கு நீங்கதான் தயவு பண்ணணும் என்று கண்கலங்கினார். அட... இதுக்கு போய் அழுதுட்டு? நான் பாத்துக்கறேன் ஆத்தா... நீங்க போங்க! என்று உன் பாட்டியை அனுப்பிய என் தந்தை, கணக்குப்பிள்ளையை அழைத்து அந்தப் பொண் ணுக்கு ஒரு நல்ல பையனாப் பாருங்க... நாமளே எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வச்சிருவோம் என்றார்.
நான் என் தந்தைக்கருகில் போய் தயக்கத்துடன் உங்களுக்கு சரினுபட்டா... நானே அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேம்ப்பா என்றேன். என் தந்தையோ பெரும் புகைப்படமாய் இருந்த என் தாயைப் பார்த்து... பார்த்தியா உன் பையனை! என்று என்னை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.
மாலையே உன்னைப் பெண் கேட்க அப்பா கிளம்புகையில், உன்னோடு விளையாட நினைத்த நான், நீ எதிரில் வந்தால்தான் வருவேன் என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு உனக்காகக் காத்திருந்தேன்.
சற்று நேரத்தில்... வெட்கம் புடைசூழ நீ வந்தாய், உன் பாட்டியோடு.
உன் எதிரில் வந்து நின்ற நான் உன்னைப் பெண் கேட்க எங்கப்பா உன் வீட்டுக்குப் போயிருக்காங்க... நீ என்னடான்னா ரோட்டுல சுத்திட்டிருக்க! என்றேன் சிரிக்காமல்.
பாருங்க பாட்டி என்று நீ உன் பாட்டிக்குப் பின்னால் ஓடி ஒளிந்தாய்.
உன் பாட்டி சந்தோஷத்தில் கை கூப்பினார். உன் கண்களிலோ நீர்.
நீங்கதான் பாட்டி சந்தோஷப்படறீங்க... ஆனா, உங்க பேத்திக்குப் பிடிக்கல போலிருக்கே... அழுதே! என்றேன்.
அய்யய்யோ... நான் அழல! என்றுவேகவேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாய்.
இந்த ஊரில் எல்லோருமே அதிர்ஷ்டத்தை எதிரில் வரச் சொல்லிவிட்டு... கடந்து கடந்து போய் விட்டார்கள். எனக்குத்தான் அந்த அதிர்ஷ்டத்தைக் கட்டிக்கொள்கிற அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!
நீ பூவரசம் இலையில்
பீப்பி செய்து ஊதிப் பார்த்து
குழந்தைகளுக்குக் கொடுத்தாய்.
அருகில் இருந்த மூங்கில் மரங்கள்
கண்ணீர்விட்டுக் கதறின.
நீ முகம் கழுவுகையில்
ஓடிய தண்ணீரைப் பார்த்து
திடுக்கிட்டுவிட்டேன் நான்.
ஒவ்வொரு நாளும்
இவ்வளவு அழகையா
வேண்டாமென்று
நீ நீரில் விடுகிறாய்.
தபூ சங்கர்
ுயில் கலைந்து எழுந்து குளிக்கக் கிளம்பும் உன்னைத் தடுப்பதே, ஒவ்வொரு காலையும் அழகான போராட்டமாகிப் போகிறது எனக்கு.
குளித்து சுத்தமாகத்தான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும் என்று உன் அம்மா சொல்லி அனுப்பியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு... எழுந்தவுடன் குளித்தே ஆகவேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறாய் நீ.
ஒவ்வொரு நாளும் நீ தூங்கி எழும்போதெல்லாம்... நீ தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு வருகிற அந்த அழகான தருணங்கள்... பிறந்த குழந்தை தவழ்ந்து, எழுந்து, நடக்கிற பருவங்களாய் இருக்கிறதடி எனக்கு. நீ உடனே குளிக்கப் போய்விட்டால்... அந்த அழகு எல்லாம் தண்ணீரில் கரைந்து போய் விடாதா?
தூங்கி எழுந்த உன் முகத்தைச் சுற்றி இது புதிய முகமோ? என்கிற ஆச்சரியத்தோடு பறக்கும் உன் முடிகளின் அழகைப் பாரேன்... நீ குளித்து விட்டால் அந்த முடிகளின் சிறகுகள் எல்லாம் ஈரமாகி, பறக்க முடியாமல் தவிக்காதா?
குளித்து முடித்து ஈரம் அப்பிய உடையுடன் நீ இந்த வீட்டில் வளைய வருவது கொள்ளை அழகுதான் என்றாலும் அது வேறு அழகடி. அதற்காக இந்த இரவு அலங்கரித்து அனுப்பிய உன் அழகை ஒரு அரை மணி நேரமாவது நான் ரசிக்கவில்லை என்றால்.. சொர்க்கத்தில் இருக்கும் லைலாக்களும் மஜ்னுக்களும், அனார்கலிகளும் சலீம்களும் என்னைத் திட்டுவார்களடி! அய்யோ... இவனுக்குக் காதலிக்கத் தெரியவில்லையே! என்று தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டு கூடி வருந்துவார்களடி!
போதும்... போதும். கசங்கிய இந்தச் சேலையை மாற்றிக்கொள்ளவாவது விடுங்களேன் என்று திருவாய் மலர்ந்தாய்.
??அய்யோ... இது கசங்கலா? உன் சேலைக்கு இரவு போட்டு விட்ட இஸ்திரியடி!?? என்றேன்.
ஆ... எனக்கு மயக்கம் வருது என்று சிணுங்கினாய்.
உன்னை மயக்க தினமும் இப்படி அரை மணிநேரம் போராட வேண்டி இருக்கிறது எனக்கு. ஆனால் நீயோ தூங்கி எழுந்து முறிக்கும் ஒரு அழகுச் சோம்பலில் என்னை மயக்கி விடுகிறாயே வெறும் அரை நொடியில்.
?இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்தானே! என்றாய்.
அடிப்பாவி.. இது ஆசையா... மோகமா... அதையும் தாண்டி காதலடி! அய்யோ லைலாக்களே... கொஞ்சம் இறங்கி வந்து, காதல் என்பது காலத்தை வென்றது என்பதை இவளுக்குச் சொல்லுங்களேன்.
உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்
பிறந்திருக்க வேண்டும் என்று.
ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.
நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்.
தபூ சங்கர்-
ஆறு வருடங்களுக்கு முன்பு, முன்னூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நான் இந்தக் கல்லூரிக்குப் படிக்க வந்த முதல் நாளே தெரிந்துவிட்டது, இந்தக் கல்லூரியைப் பற்றி வெளியே பரவிக்கிடக்கும் புகழைவிட நூறு மடங்கு அதிகமாக, இந்தக் கல்லூரிக்குள் உன் புகழ் பரவிக்கிடக்கிறது என்பது.
அதோ மகா வாசல் தெளிக்கிறாடா என்று ஒரு கும்பல் ஓடும். இதோ மகா கோலம் போடுறாடா என்று இன்னொரு கும்பல் ஓடும். டேய்... மகா ஸ்கூல் கௌம்பிட்டாடா என்று ஒரு கூட்டம் கூடும். அத்தனை யையும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
கல்லூரியெங்கும் அழகழகாய் பெண்கள் சுற்றிக்கொண்டிருக்கையில், இந்தக் கல்லூரியே ஸ்கூல் படிக்கும் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறது என்றால், அப்படியென்ன கிளியோபாட்ரா அவள்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டு... அதையும்தான் பார்த்துவிடுவோமே!ՠஎன்று உன்னைப் பார்க்கக் கிளம்பினேன்.
கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவரின் மகள்தான் நீ என்பதையும் கல்லூரிக்குள்ளேயேதான் உன் வீடிருக்கிறது என்பதும் தெரிய வர, நீ ஸ்கூல் கிளம்பும் தரிசனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த எங்கள் சீனியர் கூட்டத்துக்குப் பின்னால் ஜூனியர்கள் நாங்கள் சேர்ந்துகொண்டோம்.
உன்னைப் பார்த்தவுடன், எலேய்... இவ வெறும் கிளியோபாட்ரா இல்லடா... பஞ்சவர்ணக்கிளியோபாட்ரா என்று கிசுகிசுத்தபடி உன் பின்னா லேயே போனது எங்களில் ஒரு கூட்டம். கிளியா இது? மயில்டா... மயிலோபாட்ரா என்று கிறங்கியபடி மிச்சக் கூட்டமும் உன் பின் தொடர்ந்தது.
எனக்கும் ஆசை. ஆனால்... ச்சே, இத்தனை பேர் சுற்றும் பெண் பின்னால் நாமும் சுற்றுவதா என்று ஒரு சின்ன ஈகோ. அதற்காக உன்னைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? நீ வரும் போதும் போகும்போதும் ஒன்றும் உன்னைப் பார்க்கவில்லையே! என்பது மாதிரி உன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால், அன்று திடீரென உன் அம்மா என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
அந்தச் செய்தி கேட்டு கல்லூரியே கொதித்துப் போய்விட்டது. இதுக்குடா? என்றும் இப்படிடா? என்றும் என்னைக் குடைந்தெடுத்து விட்டார்கள் என் நண்பர்களும் சீனியர்களும்.
?உன் கையெழுத்து நல்லாருக்குன்றதால தான் உன்னைக் கூப்பிட்டேன். தினமும் சாயங்காலம் வந்து நான் எழுதற ப்ராஜெக்டைக் கொஞ்சம் காப்பி பண்ணித் தர்றியாப்பா? என்றார்உன் அம்மா.
மௌனமாகத் தலையாட்டினேன். ஆனால் மனசோ டேய், உன் கையெழுத்து மட்டுமில்ல.. தலையெழுத் தும் நல்லா இருக்கு! என்று குதித்தது. அதன் பிறகு வந்த நாட்கள்... உன்னை மிக மிக அருகில் பார்த்த நாட்கள்... எல்லாம் காதல் என்னைக் கட்டித் தழுவிய நாட்கள். ஆனால், எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், கழிந்து போயின மூன்று வருடங்கள்.
படிப்பு முடிய முடிய, உன்னைக் காதலித்தவர் களெல்லாம் தங்களின் காதல்களைப் புதிதாக வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறி னார்கள். நீ எப்போதும் போலயாரையும் காதலிக்காமலேயே இருந்தாய். எனக்குப் படிப்பு முடிந்தபோது எல்லோரையும் போல என்னால் வெளியேறிவிட முடியவில்லை. அங்கேயே தொடர்ந்தேன். அங்கேயே ஒரு ஆசிரியர் வேலையும் வாங்கிக்கொண்டேன்.
இடையில் நீயும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு இந்தக் கல்லூரியிலேயே சேர்ந்தாய்.
உன் வீட்டை நான் கடக்கும்போது உன் அம்மா பார்த்துவிட்டால், உள்ளே அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார். அப்படியே போயின இரண்டு வருடங்கள்.
உனக்குக் கல்லூரிப் படிப்பு முடியப் போகிற ஒரு நாளில், உன் வீட்டுக்கு வந்து உன் அம்மாவிடம் தயக்கத்துடன் உன்னைப் பெண் கேட்டேன், தன்னந்தனி ஆளாக.
எதுவும் பேசாமல் என்னை ஒரு பார்வை பார்த்த உன் அம்மா, உள்ளே இருந்த உன்னை அழைத்து
உன்னைப் பெண் கேக்கறார்... என்ன சொல்ல? என்றார்.
நீயோ முடியாதுனு சொல்லிடுங்க என்று சட்டென உள்ளே போனாய். அடிபட்ட பறவைபோல சிறகொடிந்து போனேன். நான் கேட்டது தப்புனா என்னை மன்னிச்சுடுங்க என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு எழுந்தேன்.
நில்லுப்பா என்ற உன் அம்மா, என்ன பையன்ப்பா நீ... உன்னை என் பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆகுது. அவளுக்குக் கெடைச்ச டாக்டர் ஸீட்டைக்கூட வேண்டான்னுட்டு அவ இங்க படிக்கிறதே உனக் காகத்தான்...? என்றார். ஒரு கோடி கிதார் நரம்புகள் ஒரே நேரத்தில் மீட்டப்பட்டது போலிருந்தது எனக்குள். ஏம்மா... அவருக்கும் என்னைப் பிடிக்குமாம்மா..??னு ஆயிரம் தடவைக்கு மேல எங்கிட்ட கேட்டுட்டா. அவகிட்டே இன்னும் நீ உன் காதலையே சொல்லாம, திடீர்னு கல்யாணத்தைப் பத்திப் பேச வந்தா, அவளுக்குக் கோபம் வராதா பின்னே? என்று சிரித்தார் உன் அம்மா.
பரவசமாய் ஓடிவந்து உன் முன் நின்றேன். இத்தனை வருஷமா என்னை ஏன் தவிக்கவிட்டீங்க? என்று அழுதாய்... அடித்தாய். நான் உன் விரல் பற்றினேன். என் ஆறு வருடக் காத்திருப்பும் உன் காலடியில் நொறுங்கியது. உன் கண்ணீர் அதை ஆசீர்வதித்தது!
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
இது எந்த ஊர் ஆப்பிள்?
அது எந்த ஊர் ஆப்பிள்? என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
நீ எந்த ஊர் ஆப்பிள்?
தபூ சங்கர்-
என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!
குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!
பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத இடம் பார்த்து... தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில் சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!
என் கல்லூரி விடுமுறை நாட்களில், அப்பாவுக்குத் துணையாக நான் கல்யாணப் பந்தல் போடப் போகிறபோதெல்லாம்... என்றாவது ஒரு நாள் உனக்கும் திருமணம் நடக்கும்... அந்தத் திருமணத்தில் இப்படிப் பந்தல் போடுவதுதான் என் பங்காக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால்... ஆனால்... என் உள் மனதின் ஆழத்தில் அந்த மணப்பந்தலில் மாப்பிள்ளையாக அமரப் போவதே நீதானடா! என்று எப்போதும் ஒரு பட்சி சொல்லும்.
என் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் என்னை அழைத்தார் உன் தந்தை. தம்பி... நம்ம மில்லைப் பாத்துக்கிறீங்களா? என்றார்.
சரிங்க! என்று வேலையை ஆரம்பித்தேன்.
அடுத்து வந்த பொங்கல் திருநாளில்... உங்கள் வீட்டுக்கு வந்த என்னை உள்ள போய்ச் சாப்பிட்டு வாங்க தம்பி என்றவர், திரும்பி உன்னை அழைத்து தம்பிக்கு சாப்பாடு போடும்மா என்றார். ஆடிப்போய்விட்டேன் நான்.
பொங்கல் வைத்து அம்மனுக்குப் படையல் போடுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். ஆனால், நீ பரிமாற வந்தது, அம்மனே எனக்குப் படையல் போடுவதைப் போல இருந்தது. நம்ப முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்தேன்.
வேற என்ன வேணும் தம்பி? என்றார் உன் தந்தை.
ஒண்ணும் வேணாங்க... பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதுங்க எனக்கு என்றேன்.
சிரித்தபடி என்னைப் பார்த்த உன் தந்தை, அந்த தேவ வார்த்தைகளை உதிர்த்தார்... பொம்மியை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சா கண் கலங்காமப் பாத்துப்பீங்களா..?
கண்கள் கலங்கின எனக்கு. உள்ளுக்குள் இருக்கும் பட்சியோ சொன்னேன்ல என்று கூவிக் குதிக்க ஆரம்பித்தது.
திருமணம் முடிந்த அடுத்த நாள் அதிகாலை சட்டென்று விழிப்பு வந்து, வேகவேகமாக முகம் கழுவிக்கொண்டு நான் கிளம்புகையில், பால் எடுத்துட்டு வரவா கௌம்பிட்டீங்க என்றாய் ஒரு மர்மப் புன்னகையோடு.
ஆமாம் என்றேன்.
அதெல்லாம் உங்க அம்மா எடுத்து வந்து கொடுத்துட்டாங்க என்றாய்.
அடடா! என்றேன்.
ஏன் ரொம்பக் கவலைப் படறீங்க... அந்த மூணு சொட்டுப் பால் போயிடுச்சின்னா என்றாய் சிரித்தபடியே.
தெரியுமா? என்றேன் வியப்பாக.
எப்பவோ! என்று புன்னகைத்துவிட்டு Ԧamp;#2990;னசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சிக்கிட்டு... ?பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதும்?னு வசனம் பேசுனீங்கՠஎன்று கிள்ளினாய். ஆஹா... ராணி வம்சக் கிள்ளல் அது.
மூணு சொட்டு இனிமே மறந்துடுங்க. சொம்பு நிறைய பால் காய்ச்சித் தர்றேன். மூச்சு முட்டக் குடிங்க! என்று என் கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தாய்.
அனுபவிடா! என்று கூப்பாடு போட்டது என் பட்சி.
பொம்மைக் கடைப் பக்கம் போகாதே
என்றால் கேட்கிறாயா
பார்...
குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம்பிடிப்பதை
இன்று
காதல் ஜெயந்தி
முழிக்காதே....
இன்று உன் பிறந்தநாள்.
எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்... உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார்.
எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள். வெளியே போ! அவள் வருகிற நேரமிது என வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.
உடனே கடவுளுக்குக் கோபம் வந்து, என்னை எரிக்கப் பார்த்தார். உன் அரவணைப்பில் இருக்கும் என்னை எரித்துவிட முடியுமா அவரால்? தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியை மறைக்க முடியாமல், முகம் எல்லாம் வேர்த்துக்கொட்ட, மறைந்துவிட்டார் கடவுள்.
ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் நாம்தாம் என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பிறருக்கு வேண்டுமானால் எல்லாமுமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு எல்லாம் நீதான்!
இந்தக் கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை, ?என்னவருக்கு என்ன வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.இனி அவரைத் தொந்தரவு செய்யாதே! என்று.
தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!
உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!
இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத்தூக்கிப் போட்டுவிடு.
அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது!
கர்ப்பக் கிரகம்
தன்னைத்தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?
நீ சொம்பில் நீரெடுத்து
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னை நானே...
யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!
தபூசங்கர்
மார்கழி மாதக் கோலத்துக்குச் சூட்டுவதற்காக என் அம்மா உன் வீட்டில் பூசணிப் பூ வாங்கிவரச் சொல்லுவார்.
நான் வாங்க வரும்போது, நீ என் அம்மாவுக்கு இரண்டு பூசணிப் பூக்களும், எனக்கு ஒரு புன்னகைப் பூவும் தருவாய். என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிப் போகும் வார இதழ்களில் இருக்கும் ஆடைக்குறைவான பெண்களுக்கு ஆடை வரைந்து திருப்பிக் கொடுப்பாய்.
பொங்கலன்று... நாங்கள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டைப் பார்க்க வருமாறு உன்னை அழைத்தேன். நீயும் வந்தாய். வீட்டின் ஒவ்வொரு அறையாக உனக்குக் காட்டிவிட்டு, என்னுடைய அறை இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்து வந்தேன்.
அதில், அப்போதுதான் தரைப் பூச்சு முடிந்திருந்தது. நான் வெளியே நின்றுகொண்டு, இதுதான் என் அறை. உள்ளே போய்ப் பார்!ՠஎன்றேன்.
உள்ளே காலடி எடுத்து வைத்த நீ, உன் பாதம் ஈரத்தரையில் பதிந்ததைப் பார்த்துவிட்டு, அச்சச்சோ... என்று பதறினாய்.
பதறாதே... உன்னை அழைத்து வந்ததே அதற்குத்தான்! என்றேன்.
நீ வெட்கத்தைக் கொட்டிவிட்டு ஓடிப் போனாய். உன் வெட்கத்தில் என் வீடு சுபிட்சம் அடைந்தது. ஆனால், அடுத்த நாள் நடந்த ஜல்லிக்கட்டில்... இந்தக் காளையை அடக்குபவருக்குத் தான் என் பெண்! என்று உன் தந்தை அறிவித்ததைக் கண்டு, நான் பதறிப் போனேன்.
நீ வளர்த்த அந்தக் காளையை அடக்க, யார் யாரோ பாய்ந்தார்கள். ஆனால், அனைவரை யும் புரட்டி எடுத்து விட்டது உன் காளை!
கடைசியில், நான் இறங்கப் போனேன். நீ கொஞ்சம் பொறு! என்று ஜாடை செய்துவிட்டு, உன் ரிப்பனில் ஒன்றை உருவி, ஒரு சிறுமியிடம் கொடுத்து அனுப்பினாய், ரகசியமாக!
அதை வாங்கிக்கையில் கட்டிக்கொண்டு இறங்கிய என்னிடம் உனது காளை அடங்கிப்போனது! அது உன் வாசத்துக்குக் கட்டுப்பட்டது என்பதை அறியாமல், என் வீரத்தை மெச்சினார்கள் ஊர்மக்களும் உன் அப்பனும்!
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது
நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.
நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது
என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
தபூசங்கர்